Tomato value compounds ­­-Tomato Jam & Sauce

வீணாகும் தக்காளிக்கு விடிவுகாலம்; மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றலாம்

ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் வீணாகும் தக்காளிகளை, கொள்முதல் செய்து மதிப்புக்கூட்டுப்பொருட்களாக மாற்ற நவீன தொழிற்சாலை அமைத்து தர வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 5000 ஏக்கரில் தக்காளி சாகுபடியாகிறது. இதுமட்டுமின்றி, தக்காளிக்கென சிறப்பாக அய்யலுார், கோபால்பட்டியில் பிரத்யேக சந்தைகளே செயல்படுகின்றன.

இம்மாவட்டத்தில் தக்காளி விலையை நிர்ணயிக்கும் முக்கிய சந்தைகளாகவும் இவை இருக்கின்றன. பல்வேறு சத்துக்கள் நிறைந்த தக்காளியின் விலை ஒருபோதும் நிலையாக இருப்பதில்லை. இதுமட்டுமின்றி பூச்சி, நோய் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்படுகிறது. இதையும் தாண்டி சாகுபடி செய்யும் தக்காளியில் 30 சதவீதம் வரை வீணாகிறது. தக்காளியை நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியாது. அதனால் அறுவடை முடிந்த கையோடு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு உள்ளது.

வீணாகும் தக்காளி

தக்காளி விளைச்சல் அதிகரிக்கும் போது அதன் விலை வெகுவாக குறைந்துவிடுகிறது. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் சாலையோரம் தக்காளியை கொட்டி வீணாக்குவது தொடர் கதையாக உள்ளது. மேலும் சிலர், பறிப்பு கூலி, போக்குவரத்துச் செலவு என மேலும் செலவு செய்ய விரும்பாமல் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர்.

ஜாம்-சாஸ் தொழிற்சாலை

நெல், அரிசி, கொப்பரை போன்றவற்றிற்கு உரிய விலை நிர்ணயம் செய்து அரசே நேரடியாக கொள்முதல் செய்கிறது. அதேபோல தக்காளியையும் கொள்முதல் செய்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழிற்சாலை அமைக்கும் எண்ணம் இல்லை

இதுகுறித்து திண்டுக்கல் தோட்டக்கலை துணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவிக்கையில், அரசு தரப்பில் தொழிற்சாலை அமைக்கும் எந்த திட்டமும் இல்லை என்றும், மாறாக விவசாயிகளே ஒன்று கூடி மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்த வேண்டும் என்றார். விவசாயிகளின் முயற்சிக்கு அரசு துணை நிற்கும் என்று கூறிய அவர், அதற்கு தேவையான கடனுதவிகளை மானியத்தில் வழங்கப்படும் என்றும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த தோட்டக்கலை உதவி செய்யும் என்றும் கூறினார்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்