மாட்டுப் பண்ணையானது நல்ல இலாபகரமானதாக இருப்பதற்கு மாடுகள் நல்ல உற்பத்தித் திறனுடையதாகவும், ஆரோக்கியமானதாகவும், பண்ணையில் மருத்துவச்செலவு குறைந்தும் இருக்க வேண்டும். கறவை மாடுகள் நல்ல பால் உற்பத்தித் திறனைக் கொணடிருந்தாலும் மாடுகளுக்கு நச்சுயிர், நுண்ணுயிர் மற்றும் ஒட்டுண்ணிகள் மூலமாக நோய் உண்டாகும் பொழுது மாடுகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டு பால் உற்பத்தி குறைவதோடல்லாமல் பல சமயங்களில் மாடுகள் உயிரிழக்கும் பொழுது பெருத்த பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாடுகளை நோய் தாக்காமல் இருக்க மாடுகளை வளர்ப்போர் சிறந்த பராமரிப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் மாடுகளின் உடல் நலத்தை சிறந்த முறையில் காக்க முடியும்.
நோய் எதிர்ப்புத் திறன் அதிகமுள்ள மாடுகள் மற்றும் கன்றுகள் தொற்று நோய்களால் பாதிக்கப்படுவதில்லை. மாடுகளிலும் கன்றுகளிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய காலத்தில், தக்க நோய்த் தடுப்பூசிகளைத் தவறாமல் போட வேண்டும். மாடுகளை வெகுவாகப் பாதிக்கும் பல நச்சுயிர் மற்றும் நுண்ணுயிரி மூலம் பரவும் நோய்களுக்குத் தடுப்பூசிகள் உள்ளன.
தடுப்பூசி போடும் பொழுது பண்ணையிலுள்ள அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும். மாடுகளை வைத்திருப்போர் கறவையிலுள்ள மாடுகளில் பால்; குறையும் என்பதற்காகவும், சினை மாடுகளில் கன்று விசிறி விடும் என்பதற்காகவும் தடுப்பூசிகளை போடுவதைத் தடுப்பர். இது தவறானதாகும். தடுப்பூசி என்பது நோய்கள் வராமல் தடுப்பதற்காக என்பதை மனத்தில் கொண்டு கால்நடை மருத்துவர் உதவியுடன் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். கன்றுகளுக்கு சீம்பால் கொடுக்க வேண்டும். இதனால், இளங்கன்றுகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் கிடைக்கிறது.
தரமான நச்சுத் தன்மையற்ற தீவனம், போதுமான இடவசதியுடன் கூடிய சுகாதாரமான கொட்டகை, மோசமான தட்பவெப்பநிலைகளிலிருந்து பாதுகாப்பு போன்றவற்றை அளிக்க வேண்டும். தீவனம் மற்றும் தண்ணீர்த் தொட்டியைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். மாதம் ஒரு முறையாவது தண்ணீர் தொட்டிக்கு சுண்ணாம்பு அடிக்க வேண்டும். பாசி பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர்த் தொட்டியை மூடி வைக்க வேண்டும்.
சாணத்தை 300 அடிக்கு அப்பால் எடுத்துச் சென்று உரக்குழியில் கொட்டுதல் அவசியம். நோய்க்கிருமிகள் மற்ற பண்ணைகளிலிருந்தும் உயிருள்ள அல்லது உயிரற்ற பொருட்கள் மூலம் நம் பண்ணையில் இருக்கும் மாடுகளுக்கு வர வாய்ப்பிருக்கிறது. நோயுற்ற பசுக்களை வாங்கி பண்ணைக்குள் விடுவது, எலி, பூனை போன்ற விலங்கினங்கள் பண்ணைக்குள் புகுதல் போன்ற காரணங்களால் நோய்க் கிருமிகள் நல்ல ஆரோக்கியமான மாடுகளுக்குப் பரவ வாய்ப்புள்ளது.
புதிதாக மாடுகளை வாங்கும் போது கால்நடை மருத்துவர் கொண்டு பரிசோதனை செய்து வாங்குவது நல்லது. புதிதாக வாங்கிய மாடுகளைக் குறைந்தது 15 நாட்களுக்குத் தனியாக வைத்துப் பராமரித்து நோய் இல்லையென முடிவு செய்த பின்பு மற்ற மாடுகளோடு சேர்த்து வளர்க்கலாம். எலி மற்றும் பூனைகள் பண்ணைக்குள் நுழையாமல் இருக்க தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
பண்ணையில் பயன்படுத்தப்படும் உயிரற்ற பொருட்கள், உதாரணமாக வாகனங்கள், தீவன மூட்டை, வாளி போன்ற பொருட்கள் மூலமாகக் கிருமிகள் பண்ணைக்குள் வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் மாடுகளை நோய்க்கிருமிகள் தாக்காமல் இருக்க பண்ணையின் பொதுச் சுகாதாரம் சரியாகப் பராமரிக்கப்பட வேண்டும். பீனால், லைசால், பொட்டாசியம் பெர்மாங்கனேட், பார்மலின், சுண்ணாம்புத் தூள், ப்ளீச்சிங் பவுடர், சேவ்லான் போன்ற கிருமி நாசினி மருந்துகளில் ஏதாவது ஒன்றைக் கொண்டு தினமும் தொழுவத்தையும், சுற்றுப் புறத்தையும் சுத்தம் செய்தால் நோய்க்கிருமிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். கிருமி நாசினி மருந்தின் முழுப் பயனையும் பெற வேண்டுமெனில் கிருமிநாசினி மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு தரை, மாடு நிற்கும் இடம் போன்றவற்றை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
பண்ணைக்குள் நுழையும் வாயிலில் கிருமி நாசினி மருந்து கலந்த தண்ணீரில் பண்ணைக்குள் நுழையும் அனைவரும் பாதங்களை நனைத்துப் பின் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும். வாகனங்களைப் பண்ணைக்கு வெளியே நிறுத்தி விடுவது நல்லது. இவ்வாறு செய்வதால் நோய்க்கிருமிகள் பண்ணைக்குள் வருவதைத் தடுக்கலாம்.
பால் கறக்கும் போது பால் தரையில் சிந்தக் கூடாது. அவ்வாறு சிந்த நேர்ந்தால் உடனே கழுவி விட வேண்டும். இல்லையேல் ஈ மொய்த்து நோய் பரவ வாய்ப்புண்டு. அதே போல் பால் கறக்கும் போது மடியை சுத்தமான தண்ணீர் கொண்டு நன்கு கழுவி விட்டு பிறகு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது நல்லது. பால் கறக்கும் நபர் கைகளைக் கிருமி நாசினியால் நன்கு சுத்தம் செய்த பிறகே பால் கறக்க வேண்டும்.
பால் கறக்கும் இயந்திரம் பயன்படுத்தும் போது கறவை முடிந்தவுடன் பால் இயந்திரத்தின் இரப்பர் பாகம் அனைத்தையும் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பால் காம்பைக் கறக்கும் முன்பும் கறந்த பின்பும் 0.5 சதவிகிதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கிருமி நாசினி கலவை கொண்டு கழுவ வேண்டும்.
முடிந்தவரை பண்ணையிலுள்ள மாடுகள் வெளியில் சென்று மேய்வதையும், மற்ற மாடுகளோடு கலப்பதையும் அறவே தவிர்க்க வேண்டும். அதே போல் வெளி மாடுகளையும் பண்ணைக்குள் நுழைய விடக் கூடாது. மாடுகள் நோயுற்றால் உடனே அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகித் தேவையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். நோயுற்ற பசுக்களைப் பிரித்துத் தனியாக வைத்து பராமரிக்க வேண்டும்.