பயிர்களில் மாவுப்பூச்சி உள்ளிட்ட பல்வேறு பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த இந்தக் கரைசலைப் பயன்படுத்தலாம். உளுந்து போன்ற சிறிய இலைகள் உள்ள பயிர்களுக்கு, பயிர் ஒரு மாதத்திற்கு குறைவான வயதிருந்தால் 5 வில்லைகள். ஒரு மாதத்திற்கு மேலான பயிர்களுக்கு 8 வில்லைகள் வரைப் பயன்படுத்தலாம். கத்தரி, வெண்டை போன்ற பெரிய பயிர் செடிகளுக்கு வெயில் காலங்களில் 8 வில்லைகள் உபயோகிக்கலாம். வெயில் குறைவான காலங்களில் 10 வில்லைகள் வரைப் பயன்படுத்தலாம். இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கற்பூரம் கிடைத்தால் உபயோகிக்கவும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
1. 100 ml வேப்பெண்ணை.
2. பசு மாட்டு கோமியம். புதியதாக இருந்தால் 1 லிட்டர், பழைய கோமியமாக இருந்தால் 1/2 (அரை) லிட்டர்.
3. பயிரின் வயதிற்கு ஏற்ப கற்பூர வில்லைகள்.
செய்முறை:
கற்பூரம் தண்ணீரில் கரையாது. கரும்பு ஆலைகளில் இருந்து கழிவாக கிடைக்கும் எத்தனால் கற்பூரத்தை கரைக்கும். எத்தனால் இயற்கையான ஒன்று அதனால் இதை உபயோகிக்கலாம். அல்லது கற்பூரத்தை கரைக்கும் தன்மை கொண்ட நீலகிரி தைலம் (யூகலிப்டஸ் ஆயில்) பயன்படுத்தலாம்.
வேப்பெண்ணெயை தண்ணீரின் திட நிலைக்கு மாற்ற வேண்டும். இதற்கு இயற்கை ஷாம்புக்களான சீயக்காய் அல்லது சோப்புக் காயைப் பயன்படுத்தலாம். இதனை வேப்பெண்ணையுடன் கலப்பதால் வேப்பெண்ணெயை தண்ணீரின் திட நிலைக்கு மாற்ற முடியும். சோப்பு ஆயில் மற்றும் காதி சோப்பையும் உபயோகிக்கலாம்.
வேப்பெண்ணெயை தண்ணீரின் திட நிலைக்கு மாற்றிய பிறகு, இந்த கரைசலுடன் 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1.5 ஸ்பூன் கிளிஞ்சல் சுண்ணாம்பு கலந்து கொள்ளவும். இதனால் நாட்பட்ட பூச்சி தாக்குதல்களையும் கட்டுப்படுத்தலாம். ஸ்பிரேயரில் பாதி அளவு தண்ணீரை நிரப்பி பின்பு கரைத்து வைத்துள்ள கற்பூர கரைசல் மற்றும் வேப்பெண்ணை கரைசலை கலந்து கொள்ளவும். பிறகு ஸ்பிரேயரில் மீதமுள்ள பகுதிக்கும் தண்ணீரை ஊற்றி விடவும். இப்பொழுது அனைத்துக் கரைசல்களும் தண்ணீருடன் நன்றாக கலந்துவிடும். இதனைச் செடிகளுக்கு அடிக்கலாம்.
எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்:
கற்பூரக் கரைசல் பயிர்களுக்கு மிகச்சிறந்த பயிர் ஊக்கி ஆகும். இந்த கரைசலைப் பயிர்களுக்கு கொடுப்பதால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மகசூலும் அதிமாக இருக்கும். முருங்கைக்கு பயன்படுத்துவதால், 20 நாட்களில் காய் பறிக்கலாம்.
எள் பயிருக்கு 2-3 முறை உபயோகிப்பதால் செடிகள் நன்றாகவும், உயரமாக வளரும். பூக்களும் அதிகம் பிடிக்கும். எலுமிச்சை மற்றும் மல்லிகை பூ ஆகியவற்றில் தொடர்ச்சியாக காய்கள் மற்றும் பூக்கள் அறுவடை செய்யலாம். மிளகாய்க்கு ஆரம்பத்திலிருந்து பயன்படுத்துவதா முடக்கு நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். வெங்காயத்தில் நுனி காய்கள் வராது.
உளுந்து பயரில் அளவுக்கு அதிகமான பூக்கள் பூக்கும். வேர்கடலையை இலை பூச்சி தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும். இதன் காரணமாக நல்ல ஒளிசேர்க்கை நடைபெற்று அதிக மகசூல் கிடைக்கும். பருத்திக்கு ஆரம்பத்திலிருந்து கற்பூரக் கரைசல் கொடுத்து வந்தால் காய் துளைப்பான் நோயை முற்றிக்கும் தடுக்கலாம். மேலும் அதிகமான பூக்கள் வருவதால் அதிக காய்பிடிப்பு இருக்கும். கற்பூரக் கரைசல் பருத்தி செடியின் ஆயுட்காலத்தை அதிகரிக்கிறது, இதனால் அதிகமான மகசூல் கிடைக்கும்.
கற்பூரக் கரைசல் அனைத்து வகையான பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி கொல்லியாக பயன்படுகிறது. பூக்கள் வருவதற்கு காரணமான ஹார்மோன்களை கற்பூரக் கரைசல் தூண்டுவதால் அதிகமான பூக்கள் உண்டாகி அதிக மகசூலை குடுக்கும். மாவு பூச்சியை கற்பூரக் கரைசல் சில மணி நேரத்திற்குள் கட்டுப்படுத்திவிடும். வேறு எந்த மருந்தும் இந்த அளவுக்கு மாவுப் பூச்சியை கட்டுப்படுத்தாது.
கொய்யா மற்றும் பெருநெல்லியில் சாம்பல் நோயை முற்றிலும் தடுக்கும் தன்மை கொண்டது. கற்பூரக் கரைசல் கொடுப்பதால் அதிகமான பூக்கள் பூக்கும். கருவேப்பிலைக்கு கற்பூரக் கரைசல் கொடுப்பதால் அனைத்து பூச்சி தாக்குதல்களில் இருந்தும் காக்கலாம். கரும் பச்சை நிற இலைகள் கிடைக்கும். தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியான ஸ்ரீதர் என்பவரால், இந்தக் கரைசல் கண்டுபிடிக்கப்பட்டு, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.