ஆயிரம் காச்சி தென்னை மரம்:
பொதுவாக தென்னை மரங்கள் உயரமாக வளரும். ஆனால் இவ்வகை ஆயிரம் காச்சி தென்னை மரங்கள் குழந்தைகள் கூட எட்டிப் பறிக்கும் தூரத்தில் வளரும். இவை ஹைப்ரிட் ரகம். அதனால் தான் இவை சீக்கிரம் பயன் அளிக்கும். இவ்வகை குட்டை மரங்கள் நம் தமிழ் நாட்டிற்கு வந்து 5 முதல் 6 வருடங்கள் ஆகிறது.
இவற்றை கிராமங்களில் மட்டும் அல்ல நகர்புறங்களிலும் வளர்க்கலாம். காரணம் இவை குட்டை ரக மரமாக இருப்பது தான். இந்த அவசர கால யுகத்திற்கு ஏற்ற மரம் என்று கூறினால், அது கண்டிப்பாக ஆயிரம் காச்சி தென்னை மரம் தான்.
பலன் நிச்சயம்:
இது குறித்து விவசாய படிப்பு பயின்றுள்ள சிவகங்கை மாவட்டம் ஆத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி பேசுகையில், இந்த ஆயிரம் காச்சி தென்னை மரக்கன்றுகள் நட்ட மூன்றரை வருடங்களில் சுமார் 3000 தேங்காய்களை தரும். இவற்றை நடும் போது ஒரு கன்றுக்கும் மற்றொரு கன்றுக்கும இடையே சுமார் 10 முதல் 15 அடி வரை இடைவெளி விட வேண்டும்.
நன்கு ஆழ குழி தோண்டி அதாவது வழக்கமாக தென்னை மரக்கன்று நடுவது போல குழி தோண்டி, கன்றை வைத்து, முறையாக பராமரித்தால் பலன் நிச்சயம். இவை வைத்த மூன்றரை ஆண்டுகளில் பலன் தந்த பிறகு, மீண்டும் புதிய கன்றுகளை நடவேண்டும். பழைய மரங்களுக்கு அருகிலேயே புதிய கன்றுகளை மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நட்டு வைத்தால் அடுத்த சாகுபடிக்கு தயாராகி விடலாம். இவற்றின் உயரம் குறைவு என்பதால், விவசாய நண்பர்களுக்கு கூலி ஆள் செலவும் மிச்சம் என்றார்.
இவற்றை எங்கு வாங்குவது?
அரசு மற்றும் தனியார் நர்சரிகளில் வாங்கலாம். ஒரு தென்னங்கன்றின் விலை 600 முதல் 1000 வரை இருக்கும். இடத்தை பொறுத்து விலை இருக்கும்.