சூரியகாந்தி நிலக்கடலைக்கு அடுத்தபடியாக மிக அதிகமான பரப்பளவில் பயிரிடப்படும் ஒரு முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். நம் நாட்டில் கிட்டத்தட்ட 2 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. சூரியகாந்தி எல்லா இடத்திலும், எல்லா பருவத்திலும் நன்கு வளர்வதினால் பல மாநிலங்களில் பயிர் செய்யப்படுகிறது. முதலில் தென்னிந்தியாவில் தான் அதிகம் பயிரிடப்பட்டது. ஆனால், தற்பொழுது பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களிலும் அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் சூரியகாந்தி இரகத்தில் மகசூல் குறைந்து காணப்பட்டது. ஆனால் வீரிய ஒட்டு இரக விதையை பயிரிட்டால் அதிகமான விதை பிடிப்பு இருக்கும். பூச்சி மற்றும் பூசணங்கள் அதிகமாக தாக்குவதில்லை. பயிர் ஒரே சீராக நன்கு வளரும். மேலும் 20-25 சதம் அதிகமாக விளைச்சல் கிடைக்கும்.
இந்தியாவில் வேளாண்மைப் பல்கலைக் கழகங்களும், தனியார் நிறுவனங்களும் பல வீரிய ஒட்டு இரக சூரியகாந்தியை வெளியிட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 70 சதம் வீரிய ஒட்டு இரக சூரியகாந்தி நம் நாட்டில் பயிராகிறது. அதிக மகசூல் கிடைக்கிற ஒட்டு இரக சூரியகாந்தியை பயிரிட்டு உழவர்களும் நல்ல இலாபம் பெறுவதோடு தாவர எண்ணெய் உற்பத்தியில் நம் நாடும் தன்னிறைவு அடையும். பயிரிடப்படும் மற்ற எண்ணெய் வித்துக்களைவிட சூரியகாந்தி நல்ல விளைச்சல் திறன் கொண்டுள்ளது. சராசரியாக சூரியகாந்தியிலிருந்து ஒரு எக்டருக்கு 400 கிலோ எண்ணெய் கிடைக்கிறது. மேலும் சூரியகாந்தி எண்ணெய்யின் தரம் மற்ற எண்ணெய்களைக் காட்டிலும் சிறந்தது. இதில் அளவுதணிக்கப்படாத கொழுப்புகள் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.
விதை நிலம் தேர்வு செய்தல்
- எல்லா மண் வகையிலும் சூரியகாந்தி பயிரிடலாம்.
- விதை நன்கு முளைக்க, பயிர் வீரியமாக வளர, இடப்படும் உரங்களை சரியான முறையில் பயிருக்குக் கொடுக்க, மண் ஈரம் மற்றும் காற்று ஆகியவை பயிருக்கு கிடைத்திட கீழ்க்கண்டவாறு நல்ல நிலமாக தேர்வு செய்தல் வேண்டும்.
- நிலம் வளமானதாக இருத்தல் வேண்டும்.
- வடிகால் வசதியுடன் இருத்தல் வேண்டும்.
- கார அமில நிலமாக இருத்தல் கூடாது. மண் அரிமானம் உள்ள நிலமாக இருக்கக் கூடாது.
- தேர்வு செய்த நிலத்தை நன்கு கட்டி இல்லாமல் புழுதியாக தயார் செய்து, நிலத்தில் நீர் தேங்காவண்ணம் சமன் செய்து கொள்ள வேண்டும்.
பயிர் விலகும் தூரம்
சூரியகாந்தி ஒரு அயல் மகரந்தச் சேர்க்கைப் பயிராகும். இருவேறு இரகங்கள் அருகில் இருந்தால் ஒன்றுடன் ஒன்று மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு பயிரின் இனத்தூய்மை பாதிக்கப்பட்டுவிடும். எனவே பயிரிடப்படும் விதை பயிரானது பிற இரகப் பயிரிலிருந்து குறைந்தது 600 மீட்டர் தூரம் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
விதைப்புப் பருவம்
உரிய பட்டத்தில் விதைக்கும் பயிரே அதிக விளைச்சலைத் தரவல்லது. பொதுவாக பூக்கும் தருணத்தில் பெரு மழை பெய்தால் பூக்கள் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் குறையும். தொடர்ச்சியாக மேகமூட்டமும், வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தால் பூச்சி மற்றும் பூசணங்களின் தாக்குதல் அதிகமாகும். ஆகவே பருவம் தவறினால் பலன் குன்றும்.
ஜூன் – ஜூலை, அக்டோபர் – நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் ஏற்ற பருவங்கள் ஆகும். விதை தேர்வு மற்றும் விதை நேர்த்தி நன்கு சுத்தப்படுத்திய, தரமான விதைகளை விதைப்புக்காக உபயோகிக்க வேண்டும்.
9/64 அளவுள்ள (3.6 மி.மீ.) வட்டக் கண் சல்லடை கொண்டு சலித்த விதைகளை உபயோகிக்க வேண்டும். பொக்கு விதைகள், மிகச்சிறிய மற்றும் உடைந்த விதைகளை விதைப்பதற்கு முன்பு நீக்கிவிட வேண்டும். விதைப்பதற்கு தேர்வு செய்த விதைகளை ஒரு கிலோவிற்கு 2 கிராம் என்ற அளவில் திராம் மருந்துடன் விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
விதைப்பு
- பெண் விதை : 4-4.5 கிலோ
- ஆண் விதை : 1-1.5 கிலோ
வீரிய ஒட்டு விதை உற்பத்தியில் இரண்டு தாயாதி இரகங்களை ஒட்டு சேர்ப்பதால் அவ்விதைகளை சரியான விகிதத்தில் விதைப்பதன் மூலம்தான் விதை உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
பெண் மற்றும் ஆண் விதைகளை 3:1 என்ற விகிதத்தில் அதாவது 3 பெண் வரிசைக்கு ஒரு ஆண் வரிசை இருக்குமாறு விதைகளை விதைக்க வேண்டும். மேலும் விதை உற்பத்தி செய்யும் வயலை சுற்றிலும் எல்லை வரிசையாக 4 வரிசை ஆண் விதைகளை விதைக்க வேண்டும். இதனால் விதை உற்பத்திக்கு அதிக மகரந்தம் கிடைப்பதோடு மற்ற இரக மகரந்தம் ஏற்படுத்தும் இனக்கலப்பையும் கட்டுப்படுத்த முடியும்.
பார் அமைக்கும் கருவியைக் கொண்டோ அல்லது மண்வெட்டி கொண்டோ ஒரு வரிசைக்கும் மற்றொரு வரிசைக்கும் 1 அடி இடைவெளி இருக்குமாறு பார் அமைக்க வேண்டும். செடிக்குச் செடி 1 அடி இடைவெளி இருக்குமாறு 3 செ.மீ. (ஒன்றரை விரற்கடை) ஆழத்தில் பாரின் பக்கவாட்டில் குழிக்கு இரண்டு விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதைத்த 15 நாளில் நன்கு வளர்ச்சி இல்லாத ஒரு செடியை கலைத்து குழிக்கு ஒரு நல்ல செடி மட்டும் இருக்குமாறு பயிரை பராமரிக்க வேண்டும்.
உரமிடுதல்
பொதுவாக மண் பரிசோதனை முடிவிற்கேற்ப உரமிடுவது நல்லது. இருப்பினும் பேரூட்டச் சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்தை 60:45:45 கிலோ/எக்டர் என்ற அளவில் தரவல்ல உரம் இடவேண்டும். இச்சத்துக்களை பயிருக்கு அளிக்க கீழ்க்கண்ட இரசாயன உரங்களைப் பயன்படுத்தலாம்.
இதில் 30 கிலோ தழைச்சத்தைக் கொடுக்கவல்ல 65 கிலோ யூரியாவை அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள 65 கிலோ யூரியாவை விதைத்த 30-35 வது நாள் களை எடுத்த பிறகு மேலுரமாக இட்டு மண் அணைக்க வேண்டும்.
களை நிர்வாகம்
விதை உற்பத்தி வயலில் ஆரம்பத்திலிருந்தே களைகளைக் கட்டுப்படுத்துவது மிக அவசியம். ஃபுளுகுளோரலின் களை கொல்லியை ஒரு ஏக்கருக்கு 800 மில்லி அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த மூன்று நாட்களுக்குள் கைத் தெளிப்பான் கொண்டு அகலவாய் தெளிப்பு முனை பொருத்தி பின் நோக்கி நடந்து, மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். களை கொல்லி தெளிக்கும் வயலில் ஈரம் இருக்க வேண்டும். பிறகு விதைத்த 30-35 வது நாளில் ஒரு கொத்துகளை எடுக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்த உடன் பயிருக்கு முதல் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 3வது நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு நிலத்தின் தன்மைக்கு ஏற்ப வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். பூக்கும் தருணம் மற்றும் விதை முற்றும் தருணத்தில் பயிருக்கு நீர் மிக அவசியம் ஆகும். இக்காலங்களில் நீர் பற்றாக்குறை இருந்தால் பொக்கு விதைகள் அதிகமாகி விடும். இவ்வாறு முறையாக நீர் பராமரிப்பு செய்து சூரியகாந்தியில் அதிக விதை மகசூல் பெறலாம்.
கலவன்கள் நீக்குதல்
விதை உற்பத்தியில் கலவன்கள் அகற்றுவது மிக முக்கியமான பணியாகும். ஏனெனில் கலவன்களால் விதைப்பயிரின் இனத்தூய்மை மிகவும் பாதிக்கப்பட்டு, அந்த வயல் விதை உற்பத்திக்கே தகுதியற்றதாக ஆகும் வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் களை மற்றும் சில நோய் தாக்கிய செடிகளாலும் விதையின் தரம் வெகுவாக குறைந்துவிடும். எனவே விதை உற்பத்தி வயலில் பயிரிடப்பட்ட சூரியகாந்தி இரகத்தின் குணாதிசயங்களிலிருந்து மாறுபட்டுத் தெரிகின்ற அனைத்து செடிகள், களைகள் மற்றும் நோய் வாய்ப்பட்ட பயிர்களையும் அவைகள் பூக்கும் முன்பே நீக்கிவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் பிற இனக்கலப்பில்லாத தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.
நீக்கப்பட வேண்டிய கலவன்கள் : மிக உயரமான மற்றும் மிகக் குட்டையான செடிகள், மிக சீக்கிரம் பூக்கும் செடிகள் – மிகவும் காலதாமதமாக பூக்கும் செடிகள், கிளைப்பூக்கள் உள்ள செடிகள் பூக்கொண்டையின் அளவு, விதையின் நிறம் ஆகியவற்றைக் கொண்டு கலவன்களை அகற்ற வேண்டும்.
ஆண் மற்றும் பெண் பயிர்கள் இரண்டிலும் கலவன்களை முற்றிலும் நீக்கி இனத்தூய்மையைப் பராமரிக்க வேண்டும். இந்த இரண்டு தாயாதி இரகங்களிலும் அவற்றின் குணாதிசயங்களிலிருந்து மாறுபட்ட குணத்தை உடைய செடிகளை அவை பூப்பதற்கு முன்பே பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். ஆண் மலட்டுத் தன்மை கொண்ட பெண் இரகத்தையே வீரிய ஒட்டு இரக உற்பத்திக்குப் பயன்படுத்த வேண்டும்.
எனவே பெண் வரிசையில் மகரந்தக் கொட்டிகள் இருந்தால் உடனே அவற்றை நீக்கி விட வேண்டும். மேலும் ஆண் இரகச் செடிகள் கிளைப் பூக்கள் கொண்டவை. எனவே, இந்த இரகத்திலிருந்து மாறுபட்ட செடிகளை, அவைகள் பூப்பதற்கு முன்பே பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு இரண்டு, மூன்று முறை விதை உற்பத்தி வயலை நன்கு சுற்றிப்பார்த்து கலவன்களை அகற்றி தரமான இனத்தூய்மையான விதைகளை உற்பத்தி செய்யலாம்.
விதை பிடிப்பு
- மற்ற பயிர்களைப் போல் அல்லாது விதை பிடிப்பை அதிகரிக்க சூரியகாந்தியில் தனி கவனம் செலுத்த வேண்டும். தேனீக்கள் மூலமே அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடப்பதில்லை என்றே கூறலாம். ஒரு பூக்கொண்டையில் மலர்கள் அனைத்தும் மலர்வதற்கு 7 முதல் 9 நாட்கள் வரை ஆகிறது. பூக்கொண்டையின் விதை பிடிப்புத் திறனை கொண்டுதான் சூரியகாந்தி விதை உற்பத்தி அதிகமாகிறது. ஆனால், பல்வேறு காரணங்களால் பூக்கொண்டை முழுவதும் விதை பிடிப்பு ஏற்படுவதில்லை. கொண்டையின் நடுப்பகுதியில் பெரும்பாலும் விதை பிடிப்பு இல்லாமல் அல்லது பாலை விதைகளாக இருக்கும்.
- தேனீக்கள் அதிகம் இருந்தால் விதை பிடிப்பை அதிகரிக்க ஏக்கருக்கு 2 தேனீ பெட்டிகள் வைக்கலாம். தேனீக்கள் குறைவாக உள்ள இடங்களில் பூக்கொண்டையின் விதை பிடிப்பை அதிகரிக்க பூக்களை காலை நேரங்களில் (8 மணி முதல் 11 மணி வரை) ஒரு மெல்லிய துணி கொண்டு ஒவ்வொரு பூவாக மெதுவாக தடவியும் அல்லது இரண்டு பூக்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து மெதுவாக தேய்த்து விட வேண்டும்.
- இதனால் ஒரு பூவிலிருந்து மகரந்தம் மற்றொரு பூவிற்கு சென்றடைந்து அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்பட ஏதுவாகிறது. இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஐந்தாறு முறை செய்வதால் பூக்கொண்டையில் உள்ள எல்லா மலர்களிலும் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு கிட்டத்தட்ட 20 முதல் 22 சதம் அதிக விதை பிடிப்பு ஏற்பட்டு விதை உற்பத்தி அதிகரிக்கிறது. தரமான விதை உற்பத்தியில் பயிர்களை பூச்சி மற்றும் நோய் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதும் ஒரு முக்கிய வழிமுறைகளில் ஒன்றாகும். ஏனெனில் பூச்சி மற்றும் பூசணங்களின் தாக்குதலால் விதையின் தரம் வெகுவாகக் குறைந்து விட வாய்ப்புகள் உள்ளன.
பறவை இடையூறுகள்
சூரியகாந்தி விதைகள் உருவாகும் காலக்கட்டத்தில் பறவைகள் குறிப்பாக கிளிகள் மிகுந்த சேதாரத்தை உண்டுபண்ணுகின்றன. எனவே தனி கவனம் செலுத்தி சேதத்தைத் தடுக்க வேண்டும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
- ஆட்கள் கொண்டு தகரத்தால் ஒலி எழுப்பியும், நாட்டு வெடி வைத்தும், பரண் அமைத்து கல்லெறிந்தும் கிளித் தொல்லையை கட்டுப்படுத்தலாம். ‘அக்னி’ என்ற பளபளக்கும் சிவப்பு வெள்ளை நாடாவைவயலைச் சுற்றி கட்டுவதன் மூலம் கிளிகள் வராமல் தடுக்கலாம்.
- ஒரு பகுதியில் விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளும் ஒரு இடத்தில் சூரியகாந்தி விதைப்பு செய்வதால் கிளி தொந்தரவு வெகுவாக குறையும்.
- தானே ஒலி எழுப்பும் சாதனம் பயன்படுத்தியும் பறவை தொல்லையை கட்டுப்படுத்தலாம்.
அறுவடை
- விதை பயிரை சரியான தருணத்தில் அறுவடை செய்வது மிக முக்கியம். தக்க தருணத்திற்கு முன்பே அறுவடை செய்து விட்டால் உலர வைக்கும் போது விதைகள் சிறுத்து விடுவதுடன் முளைப்புத் திறன் வெகுவாகக் குறைந்துவிடும். கால தாமதம் ஆகி அறுவடை செய்வதால் விதைகள் பூச்சி மற்றும் பூசணங்களின் தாக்குதலுக்கு ஆளாகி தரம் குறைந்து விடுகின்றன. எனவே சரியான தருணத்தில் அறுவடை செய்து அதிக மகசூலும் தரமான விதைகளையும் பெறலாம்.
- பூக்கொண்டைகளின் அடிப்பாகம் எலுமிச்சை மஞ்சள் நிறம் அடைவதே சூரியகாந்தி விதை அறுவடைக்கு சரியான தருணம் ஆகும். எனவே பூக்கொண்டைகள் எலுமிச்சை நிறமானவுடன் அறுவடை செய்ய வேண்டும்.
விதைகளை உலர்த்துதல்
பிரித்தெடுத்த விதைகளை நன்கு வெயிலில் உலர வைக்க வேண்டும். உலர்த்தும் போது தினமும் காலை 8 முதல் 12 மணி வரையிலும், பின்னர் மலை 3 முதல் 5 மணி வரையிலும் உலர்த்த வேண்டும். பகல் 12 மணியிலிருந்து 3 மணி வரை உள்ள காலத்தில் சூரியனின் புற கதிர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் வெப்பநிலை உச்சத்தில் இருப்பதாலும் விதையின் தரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. எனவே, காலை முதல் மாலை வரை தொடர்ந்து விதைகளை உலர வைக்கக் கூடாது. விதைகளை சீராகப் பரப்பி அவ்வப்போது நன்கு கிளறி விட வேண்டும். இவ்வாறு விதைகளை உலர்த்தி விதையின் ஈரப்பதம் 7-8 சதம் வந்தவுடன் உலர்ந்த விதைகளை மூட்டை பிடிக்க வேண்டும்.
விதை தரம்
- அறுவடை செய்யப்பட்ட விதைகளின் தரம் பூக்கொண்டைகளின் அளவை பொருத்து மாறுபடுகிறது. மிகச் சிறிய அளவு விட்டம் கொண்ட பூக்கொண்டையிலிருந்து (5-10 செ.மீ.) பெறப்பட்ட விதைகளின் முளைப்புத்திறன் மற்றும் வீரியம் குறைந்து காணப்படுவதால் அவற்றிலிருந்து விதைகள் எடுக்கக் கூடாது. எனவே நடுத்தர அளவு விட்டமுள்ள (11-18 செ.மீ.) பூக்கொண்டையிலிருந்து விதைகளை எடுத்து அவற்றைப் பயன்படுத்த வேண்டும். மேலும் விதைகளின் பருமனைப் பொருத்தும் தரம் வேறுபடுகின்றன.
- ஒரு பூக்கொண்டையிலிருந்து பெறப்பட்ட விதைகளிலேயே மாறுபட்ட அளவுள்ள விதைகள் காணப்படுகின்றன. இதனால் முளைப்புத்திறனும், வீரியமும் பாதிக்கப்படுகின்றன. எனவே, விதைகளை 9/64 அங்குலம் (3.6 மி.மீ.) அளவுள்ள வட்டக் கண் கொண்ட சல்லடை கொண்டு விதை சுத்திகரிப்பு செய்து தரம் பிரித்து விதைப்புக்காக உபயோகிக்க வேண்டும்.
விதை உறக்கம்
- உறக்கத்தில் உள்ள விதைகளை 300 பிபிஎம் எத்திரால் என்ற இரசாயனக் கரைசலில் ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் இட்டு காற்றுப்புகாமல் எட்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அல்லது 0.5 சத பொட்டாசியம் நைட்ரேட் இரசாயனக் கரைசலில் 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- பின்பு விதைகளை வெளியே எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி நிழலில் உலர்த்தி பிறகு விதைத்தால் முளைப்புத் திறன் அதிகரிக்கும்.
- அறுவடை செய்த உடனேயே விதைப்பு செய்வதாக இருந்தால் தான், விதை உறக்கத்தால் விதை முளைப்புத்திறன் குறைந்து காணப்படும் பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக, தரமான விதைகளை வாங்கி விதைக்கும் போது இயற்கையிலேயே விதையின் உறக்கம் நீங்கி விதைகள் நல்ல முளைப்புத்திறன் அடைந்துவிடும்.
விதை சேமிப்பு
- விதை உற்பத்தியில் விதை சேமிப்பு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. சரியான முறையில் விதைகளை சேமிப்பதன் மூலம்தான் விதையின் தரத்தை அடுத்த விதைப்புப் பருவம் வரை நன்கு பாதுகாக்க முடியும். விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் சேமிப்பில் மாறுபடுகிறது.
- எனவே விதைகளை குறைந்த கால அளவான 6 மாதம் வரை சேமிக்க ஈரப்பதத்தை 7-8 சதமாக குறைத்து துணிப்பைகளில் சேமிக்கலாம். விதையின் ஈரப்பதத்தை 5-6 சதமாக உலர வைத்து 700 காஜ் அடர்வுள்ள பாலித்தீன் பைகளில் 10 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம்.
விதை நேர்த்தி
விதைகளை சேமிப்புக்கு முன் பூசணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். திராம் அல்லது கேப்டான் பூசணக் கொல்லியை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதற்குப் பதிலாக விதைகளை குளோரினேற்றம் செய்தும் சேமிக்கலாம். குளோரினேற்றம் என்றால் கால்சியம் ஆக்ஸி குளோரைடு (அதாவது பிளீச்சிங் பவுடர்) என்ற இரசாயன பொருளை கால்சியம் கார்பனேட் என்ற பொருளுடன் சமவிகிதத்தில் கலந்து காற்று புகா பாட்டிலில் ஒரு வாரம் அடைத்து வைத்திருந்து பின்னர் அந்தக் கலவையிலிருந்து ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் என்ற அளவில் எடுத்து கலந்து பின்பு சேமிக்கவேண்டும். குளோரினேற்றம் என்பது சுற்றுப்புற சூழல் மாசுபடாத விதை நேர்த்தி முறையாகும்.
ஆதாரம் – விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்