தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்கோணத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு ஆகிய ஊர்களிலும் அதிகமாக பயிராகிறது. வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். வெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்கிறார்கள். மிதமான தட்பவெப்பம், மண்வளம், தண்ணீர்வசதி உள்ள பகுதிகளில் வெற்றிலை பயிராகும். கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண்வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண்வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
மருத்துவ குணங்கள் வெற்றிலைக்கு நிறைய உண்டு. உணவு செரிக்க, ரணங்கள் தீர பயன்படுத்துகிறார்கள். தமிழர்கள் வெற்றிலையை எல்லா மங்கள காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். வெற்றிலை சாகுபடி சவாலான விசயம் என்பதால் அழியும் விழிம்பில் உள்ளது. ஆயினும், சரியான முறையில் சாகுபடி செய்து, இயற்கை சீற்றமின்றி சந்தைக்கு கொண்டு சென்றால் நல்ல இலாபம் பார்க்கலாம். சரி, இனி வெற்றிலை சாகுபடி குறித்து முழுமையாக தெரிந்து கொள்வோம்.
பயிரிடும் முறை:
தை – பங்குனி, ஆனி – ஆவணி மாதங்களில் அகத்தியை விதைக்க வேண்டும். வெற்றிலைக் கொடியை பங்குனி – சித்திரை, ஆவணி – புரட்டாசி மாதங்களில் நடவு செய்ய வேண்டும். வடிகால் வசதி கொண்ட கரிசல் மண் வெற்றிலை சாகுபடிக்கு உகந்ததாக இருக்கும்.
பாத்தி அமைத்தல்:
நிலத்தை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் பண்படுத்திய பிறகு ஒரு மீட்டர் அகலம் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டியது நல்ல பலனைக் கொடுக்கும்.
நடவு:
தாய் கொடியின் நுனியில் இருந்து முதல் மூன்று அடி வரை நறுக்கி, அதனை மூன்று துண்டுகளாக்கி நடவு செய்ய வேண்டும். விதைக்கொடிகளில் 4 – 5 கணுக்கள் இருக்க வேண்டும்.
வேர்கள் வளர்ச்சி:
விதைக் கொடிகளை நடுவதற்கு முன் 6 பொட்டலம் அசோஸ்பைரில்லம் கொண்ட சானக்குழம்பில் அடிப்பகுதிகளை ஊறவைத்து நடவு செய்ய வேண்டும். இதன் மூலம் வேர்கள் துரிதமாக வளர்ச்சி அடையும்.
அகத்தி:
மேட்டுப்பாத்திகளில் இரட்டை வரிசைகளாக அகத்தி விதைகளை 30 செ.மீ இடைவெளிகளில் விதைக்க வேண்டும். அகத்தி நடவு செய்த பின் 60 நாட்கள் கழித்து வெற்றிலைக் கொடிகளை 45 செ.மீ இடைவெளியில் இரண்டு வரிசைகளில் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்:
கொடிகளை நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
உரம்:
கொடிகளை நட்ட 50- வது நாள் தொழு உரம் 5 டன் இட வேண்டும். ஒரு ஹெக்டருக்கு 150 கிலோ தழைச்சத்து, 50 கிலோ சாம்பல் சத்து உரங்களை இட வேண்டும். தழைச்சத்து உரங்களை நான்கு பங்குகளாக பிரித்து 45 நாட்கள் இடைவெளியில் அளிக்க வேண்டும்.
சாகுபடி:
வெற்றிலை கொடிகள் ஒரு வருடத்தில் 3 மீட்டர் வரை வளரும். கொடிகள் நட்ட 120 நாட்களில் பறிக்க ஆரம்பிக்கலாம். சுழற்சி முறையில் அறுவடை செய்யலாம் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் அனைத்து இலைகளையும் அறுவடை செய்யலாம்.ஒரு வருடத்தில் ஒரு ஹெக்டேரில் இருந்து 75 லட்சம் முதல் ஒரு கோடி இலைகள் வரை கிடைக்கும்.
வெற்றிலை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகள்:
வெற்றிலை விவசாயத்தை பாதுகாக்க சாகுபடி செய்ய கடனுதவி, இயற்கை பாதிப்பால் இழப்பு ஏற்பட்டால் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்து நிவாரணம் வழங்க வேண்டும். வெற்றிலை பல்வேறு மருத்துவ பயன்களைக் கொண்டது. வெற்றிலையை அரசே விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்து, வெற்றிலைச் சாறு தயாரித்து மருத்துவ உபயோகங்களுக்கு பயன்படுத்தலாம். அவ்வாறு செய்தால் வெற்றிலை விசாயத்தை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மருத்துவப் பயன்கள்:
வெற்றிலை பொதுவாக சீதத்தை நீக்கும் சக்தி கொண்டது. பசியை உண்டாக்கும். பால் சுரக்க வைக்கும், நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும். வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கு பயன்படுகிறது. சளி, இருமல், மாந்தம், குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பில் பற்றாகப் போட சளி குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்களிகள் வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நோய் படிப்படியாகக் குணமாகும். இதில் உள்ள பொட்டாசியம் இதய செயல்பாடுகளுக்கும், கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கும் அவசியமாகிறது. பாம்பு கடித்தவர்களுக்கு வெற்றிலைச்சாறு பருகக் கொடுப்பதன் மூலம் விஷம் முறிந்து குணமாகும்.