குறைந்த செலவில் புளியமரம் சாகுபடி செய்து லாபம் பெறுவது எப்படி ?
Cultivation of tamarind tree

விவசாயிகளிடம் தற்போது புளிய மர சாகுபடி குறைந்து வருகின்றது. ஆனால் இந்த சாகுபடியில் அதிக லாபம் எடுக்கலாம் என்பதுதான் உண்மை. ஏனெனில் புளியமரச் சாகுபடிக்கு ஆகும் செலவு மிகவும் குறைவானதாகும். முக்கியமாக புளியின் தேவையானது அனைத்து காலங்களிலும் அவசியமானதாகும். கடுமையான வெப்பம் மற்றும் வறட்சியை தாங்கி வளரக்கூடியவைகளில் புளி சாகுபடியும் ஒன்று. புளி சாகுபடிக்கு ஏற்ற பட்டம் ஆடிப்பட்டம் ஆகும்.
ரகங்கள்:
புளி ரகங்களில் உரிகம்புளி என்பது தருமபுரி அருகில் உரிகம் என்ற ஊரின் பெயரால் குறிப்பிடப்படுகின்றது. பிகேஎம்1, தும்கூர் மற்றும் ஹாசனூர் என்பது மேலும் சில ரகங்கள் ஆகும்.
நாற்று பெறும் முறை:
உரிகம் ரகம் தருமபுரியில் உள்ள தோட்டக்கலைத்துறை மற்றும் பிகேஎம் ரகம் பெரியகுளம் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறையில் கிடைக்கும். விதைகளை வைத்தும் நாற்று தயாரிக்கலாம்.
மண் மற்றும் தட்பவெப்பநிலை:
மணல் கலந்த மண் இதன் வளர்ச்சிக்கு மிகவம் உகந்தது. வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும். சராசரி மழை அளவு வருடத்திற்கு 500 முதல் 1500 செ.மீ வரை போதுமானது, மானாவாரியாகப் பயிர் செய்ய ஏற்ற பயிர் ஆகும். பருவம் : ஜுன் – டிசம்பர்.
நடவு முறை:
உரிகம் ரகத்தை நடுவதற்கு 6 x 6 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். அடர் நடவு முறையில் பிகேஎம்1 ரகத்தை 5 X 5 மீட்டர் இடைவெளியில் நடலாம். சித்திரை – வைகாசி மாதங்களில் 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். அதில் காய்ந்த இலை தழைகளை போட்டு தீ எரித்து சாம்பலாக்கி வைக்க வேண்டும். பிறகு அந்த குழியில் சிறிதளவு போர் மண், மணல் மற்றும் குப்பை கொண்டு 1 அடி மூடவேண்டும். அதை அப்படியே ஆடி மாதம் வரை ஆறவிட வேண்டும். பிறகு அதில் புளியங்கன்றை நடவு செய்யலாம்.
நீர் நிர்வாகம், களைக் கட்டுப்பாடு:
கன்றுகள் நன்கு துளிர்த்து வளரும் வரை நீர்ப்பாய்ச்சவேண்டும். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை. மானாவாரிப் பயிராக பயிரிடப்படுவதால் வழக்கமாக உரமிடுவது இல்லை. இருந்தாலும் அங்கக உரங்களை இட்டால் நல்ல பலன் கிடைக்கும். செடிகளின் ஒட்டுக்கு அடிப்பாகத்தில் தோன்றும் வேர்க்குச்சியின் துளிர்களை அவ்வப்போது அகற்றிவிடவேண்டும். மற்றும் காய்ந்த நோய் தாக்கிய குச்சிகளையும் அகற்றவேண்டும்.
ஊடுபயிர்:
அறுவடைக்கு வரும் வரை கடலை, உளுந்து, எள்ளு, பாசிபயிறு போன்றவைகளை நாம் ஊடுபயிர் செய்யலாம். குறைந்த உயரம் வளரும் பயிர்கள் ஊடுபயிர் செய்ய ஏற்றது.
பூச்சிதாக்குதல்:
இலைத்தின்னும் புழுவினைக் கட்டுப்படுத்த எண்டோசல்பான் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். சாம்பல் நோய்கட்டுப்படுத்த இந்நோயைக் கட்டுப்படுத்த டைனோகாப் 1 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
அறுவடை:
உரிகம் ரகம் 5 முதல் 8 வருடம் வரை பூ வைத்து பிறகு காய் பிடிக்கும். இதற்கு பருவநிலை மிகவும் முக்கியம். பிகேஎம் ரகம் 3 வருடம் முதல் பூ வைத்து 5 வருடத்தில் காயப்பிற்கு வரும்.
மகசூல்:
ஒரு வருடத்திற்கு ஒரு மரத்திலிருந்து 150-200 கிலோ. இதன் அடிப்படையில் தரிசு நிலத்தில் புளி சாகுபடி ஒரு லாபகரமான தொழிலாகும்.