கிடைமாடு கீதாரி வாழ்க்கை பயணம் | பகுதி 01

கிடைமாடுகளை எடுக்க வேண்டும் என்ற ஆவல் நீண்ட நாட்களாகவே இருந்தது. இதற்காக பலரிடம் தொலைபேசி எண் கேட்டுக் கொண்டோம். ஆனால், அதற்கான பயனில்லாமல் போனது. இறுதியாக கேமரா தம்பி தேடலில் ம.முருகன் அவர்கள் நமது தொடர்பில் கிடைத்தார். முதல் நாள் (19.07.2021) இரவு தொடர்பு கொண்டு பேச மறு நாள் (20.07.2021) வாங்க என்று அழைக்க, நாம் வழக்கம்போல் காலை 6 மணிக்கு நமது பயணத்தை ஆரம்பித்தோம்.

திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டி பகுதிக்குச் செல்லும் வழியில் குன்டுபன்னி எனும் கிராமத்தில் இவர் கிடைபோட்டிருப்பதாக கூறியதால், அதை நோக்கி சென்றோம். திருமங்கலம் தேவர் சிலை எதிர்புறத்தில் ஒரு தேனீர் கடையில் அப்பம், உளுந்த வடை, ஆம வடை ருசிபார்த்துவிட்டு, தேனீர் அருந்திவிட்டு, அங்கிருந்து வழியை கடையில் கேட்டுக் கொண்டு கிளம்பினோம்.

வழியில் தொடர்பு கொண்டால் கீதாரி முருகன் அவர்கள் தொலைபேசி இணைப்பு கிடைக்கவில்லை. ஒரு வழியாக ஊருக்குள் சென்று விசாரித்தபோது, அந்தா தெரியுது பாருங்க ஒரு தென்னை மரம் அதுகிட்டபோங்க, அங்கதான் கிடை போட்டிருக்காங்க என்று வழியில் ஒருவர் கூற, அங்கே சென்றோம்.

சோளதட்டைக்குள் மணி சத்தத்துடன் கிடைமாடுகள் 500க்கும் மேல் இருந்தது. அப்படி ஒரு சந்தோசம் ஆகா கிடைமாடு, கிடைமாடு…. மாடு மேய்க்கத்தான் நீயெல்லாம் லாயிக்கு என்று கூறிய வார்த்தை ஞாபகம் வந்தது. அதே ஞாபகத்தோடு அங்கு சென்று, எங்களை அறிமுகம் செய்து கொண்டோம். விடிய விடிய ஒரு பொட்டு உக்காரல, உறக்கமில்ல சாமி என்று பேச ஆரம்பித்தார் ம.முருகன் அவர்கள்.

அவர் கூற, கூற, மாடு மேய்ப்பது அவ்வளவு எளிமதான விசயம் இல்லை என்பது முதலில் புரிந்தது. அதற்கு அடுத்து அவரின் அனுபவம் பற்றி கேட்க, தலையே சுற்றியது. இத்தனை பிரச்சனைகளா ? முதலில் அவர் ஆதங்கப்படுவது எங்களுக்கு உரிய மரியாதை இன்றளவும் முழுமையாக கிடைக்கவில்லை என்பதே.

500, 1000 மாடுகளை கட்டி மேய்ப்பது என்பது கத்திமேல் நடப்பதற்கு சமம் என்பதை உணர்ந்து பேட்டியை ஆரம்பித்தோம். அவர் பேசியதை நீங்கள் மேலே உள்ள வீடியோவில் கேட்கலாம். வேறு வழியில்லாமல் அவர்கள் படும் துயரத்தில் சிலவற்றை சென்சார் செய்தே பதிவு செய்துள்ளோம். மதுரைக்குள் இரவி ேநரத்தில் சாலை கடக்கும்போது, ஒரு சில காவலர்கள் இவர்களுக்கு கொடுக்கும் இன்னல்கள்தான் அவைகள்.

எங்க அப்பா, இப்ப நான், அடுத்த என் மகன் அவ்வளவுதான் ஐயா. இனி என் பேரன் காலத்தில் கிடைமாடு வளர்ப்பு இருக்கிறது ஆச்சர்யம். நாங்க அவுங்கல இதுல விடமாட்டோம் என்றார். ஏன்ன என் மகன்களுக்கே என்ன போல திறமையா மேய்க்க முடியாது என்றபோது, அது உண்மை என்று நான் உணர்ந்து கொண்டோம்.

கீதாரிகளின் வாழ்க்கை எத்தனை வலி நிறைந்தது என்பதை நினைக்கும்போதே எனக்கு தூக்கிபோட்டது. அதுபோல் வாழ்வது என்பதை என்னால் கனவில் கூட கற்பனை செய்ய முடியவில்லை. பணம் இருந்தாலும், பாசம் காட்ட யாரும் இல்லை என்பதுதான் இவர்களின் ஏக்கமாக எனக்கு தெரிகிறது.

யாதவர்களின் வாழ்க்கை இவ்வளவு போராட்டமா ? என்று யோசிப்பதற்குள், ஐயா இந்த தொழிலில் தர்மத்துடன் இருந்தால்தான், நிலைத்து நிற்க முடியும், தப்பு, தவறு செஞ்சா, அந்த அழகு மலையான் அத்தோட அழிச்சிடுவார் என்றும், தன்னுடன் இருந்த பலரும் இன்றைக்கு இந்த தொழிலை விட்டுபோய்விட்டதாக கூறினார்.

ஐயாவின் கண்களில் தூக்கம் படர்ந்து இருந்தாலும், அவர் நின்று கொண்டே பேட்டியை கொடுத்தார். உண்மையாகவே என் கால்களுக்கு அது வலித்தது. உறக்கம் இல்லாமல் வாழ்வுக்காக வெட்ட வெளியில் போராடும் கீதாரிகளை நாம் அவமானமாகப் பேசுவதும், அடித்துவிரட்டுவதும், நாட்டின மாடுகளை அழிப்பதற்கு சமமமாகும்.

எங்க மாடுகளுக்கு கண்மாயில் குடிக்க தண்ணி கொடுக்கமாட்டுறாங்க என்று சொன்னபோதுதான், அதன் வலி இன்னமும் இதயத்தை துளைத்தது. இந்த 500, 1000 மாடுகளின் தாகத்தை யார் தீர்ப்பது என்ற கேள்விக்கு கடல் பொங்கியதுபோல் மனசு குமுறியது. மண்ணில் உள்ள யாவும் மனிதனுக்கு மட்டும் சொந்தம் என்று வாழும் மடையர்களிடம் எப்படி இதை உணர்த்துவது. இயற்கை கொடுத்த அனைத்தும், அனைத்து உயிர்களுக்கும் சமம் என்பதை எப்போது நாம் உணரப்போகிறோம் என்ற ஆதங்கம் எழாமல் இல்லை.

நாட்டுமாடுகளை காக்க வேண்டும் என்பவர்கள் முதல் குரல் தாகத்திற்கு தண்ணீர் கொடுங்கள் என்பதாக இருப்பது எத்தனை கொடியது. எல்லாவற்றையும் விட, இந்த மாடுகள் இன்னமும் அழியாமல் இருப்பதற்கு கேரளாதான் என்று கூறும்போது, வேலியே பயிரை மேய்ந்ததுபோல் நெஞ்சில் முள் குத்தியது.

கிடைமாடுகளை பார்த்த மகிழ்ச்சியோடு ஆரம்பித்த பயணம், இன்றைய இரவையும், கீதாரிகளையும் நினைக்கையில், சோளக்காட்டு பொம்மையாய் தனிமையாய் வெறுமையாய் நினைவு, நின்று கொண்டிருந்தது. புதிய அரசு இவர்களின் வாழ்வை புதுப்பிக்குமா ? கீதாரி தொழில் அடுத்த தலைமுறைக்கு நீட்டிக்குமா ?

இந்த பயணம் இந்த வீடியோவோடு நின்றுவிடாது. கீதாரிகளை தேடிக் கொண்டே நீளும். இன்னம் எவ்வளோ சொல்ல வேண்டியவைகள் உள்ளது. அதை அடுத்தத ஒவ்வொரு பதிவிலும் கூறுகின்றேன்.

நன்றிகள் !!

கீதாரி ம.முருகன் அவர்கள் தொடர்பு எண்: 99526 47223

________________________________________________________
ஹலோ மதுரை சேனல்

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

? App Link: https://play.google.com/store/apps/de…

? Facebook :https://www.facebook.com/maduraivideo

?web site : https://hellomaduraitv.com/

?web site : https://hellomadurai.in/

?web site : https://tamilvivasayam.com/

? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்