எருதுகள் விவசாயத்தில் நிலங்களை உழுவதற்கும், நிலங்களுக்கு நீர் பாய்ச்சவும், பயிர் வகைகளுக்குப் பொதி அடிக்கவும், சுமைகளை ஓர் இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்லவும் பயன்படுகின்றன. எருதுகளை நன்றாகப் பராமரித்தால் நாம் உட்படுத்தும் வேலைகளைச் செவ்வனே செய்வது மட்டுமின்றி அவற்றின் வாழ்நாளையும் அதிகப்படுத்தி மிகுதியான இலாபத்தை நமக்கு ஈட்டித் தரும் வல்லமை கொண்டதாகவும் இருக்கும்.
எருதுகளைத் தேர்ந்தெடுக்கும் முறை
எருதுகள் ஒழுங்கான உடல் கட்டமைப்பும், அதிகப்படியான உயரம் மற்றும் நீளம் உடையதாக இருக்க வேண்டும். அதிக நீளத்தைக் கொண்ட எருதுகள் அதிவேகமாகச் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். தசைப்பற்றுள்ள கழுத்துடன் உள்ள எருதுகள் அதிக சுமையை இழுக்கும் தன்மையுடனும், மிதமான தசைப்பற்றுள்ள எருதுகள் அதிக வேகத்தைக் கொண்டதாக இருக்கும். திமிலானது திடமாகவும், வட்ட வடிவிலும் இருக்க வேண்டும். கால்கள் உறுதியாகவும், எலும்புகள் கடினத் தன்மையுடனும் மொத்த உடம்பும் தசைப்பற்றுடனும் இருக்க வேண்டும்.
எருதுகள் நடக்கும் பொழுது சரியான இடைவெளி விட்டு சீராக நடக்க வேண்டும். கால் குளம்புகள் திடமாகவும், கருப்பு நிறத்தில் பளபளப்பாகவும் இருக்க வேண்டும். குளம்புகள் இரண்டும் சமச்சீருடன் இருக்க வேண்டும். கழுத்துப் பகுதியில் எந்த வித வீக்கவும், கட்டிகளும் இல்லாமல் இருக்க வேண்டும். எருதுகள் நிற்கும் பொழுது தலை தூக்கியும், வால்பகுதி உயர்ந்தும் காணப்பட வேண்டும். மேலும் எருதுகள் வேலை செய்யம் பொழுது சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் இரு எருதுகளும் சம அளவு உயரம் மற்றும் எடையுடன் இருக்க வேண்டும். அமைதியான மற்றும் வலிமையான சிறந்த எருதுகளை பெறுவதற்கு ஆண் கன்றுகளை 1 ½ வயதில் காயடிக்க வேண்டும்.
இளம் எருதுகளை வேலை செய்வதற்கு பயிற்சி அளிக்கும் முறைகள்
பயிற்சி பெற்ற எருதுகளை வேலை செய்ய வைப்பதற்கு ஒரு நபர் போதுமானதாகும். ஆனால் பயிற்சி பெறாத எருதுகளை நாம் நிலம் உழுவதற்குப் பயன்படுத்தும் பொழுது எருதுகளுக்கு முன்பு ஒரு நபரும், கலப்பைப் பிடித்துக் கொண்டு மற்றொரு நபரும் பக்கவாட்டில் மூன்றாவது நபரும் இருந்து கொண்டு எருதுகளைத் தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும். பயிற்சி கொடுப்பதற்கு 2 முதல் 3 மாதங்களுக்கு முன்பாக எருதுகளுக்கு மூக்கணாங்கயிறு குத்த வேண்டும். பயிற்சியின் பொழுது எருதுகளிடம் கடுமையான முறைகளைப் பின்பற்றக் கூடாது. எருதுகளுக்குச் சுமைகளை ஏற்றுவதற்குப் பயிற்சி கொடுக்கும் பொழுது ஒரே ஜோடி எருதுகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும் இடது புறம் கட்டும் எருதை எப்பொழுதும் இடது புறத்திலும், வலது புறத்தில் கட்டும் எருதை எப்பொழுதும் வலது புறத்திலும் மட்டுமே கட்ட வேண்டும்.
எருதுகளின் கழுத்துப் பகுதியில் மரக்கட்டையாலான கலப்பைக் கொண்டு இரு எருதுகளைச் சேர்த்து கட்டிய பிறகு கலப்பையின் நடுவே 70 கிலோ எடை கொண்ட சுமையை கலப்பையின் நடுவே கயிற்றைக் கொண்டு கட்டி விட்டு எருதுகளுக்கு வலதுபுறமாகச் செல், இடது புறமாகச் செல், நேராகச் செல் மற்றும் நில் போன்ற கட்டளையை இட வேண்டும். இவ்வாறு நாம் பல முறை பயிற்சி கொடுக்கும் பொழுது எருதுகள் சுமைகளைச் சுமப்பதற்குத் தயார் ஆகின்றன. பயிற்சி கொடுக்கப் பெற்ற எருதுகளுக்கு ஆரம்ப காலத்தில் எளிதான வேலைகளை மட்டுமே கொடுக்க வேண்டும்.
எருதுகளுக்கு உணவளிக்கும் முறை
பொதுவாக விதை விதைக்கும் காலங்களிலும் அறுவடைக் காலங்களிலும் எருதுகள் கடுமையான வேலைக்கு உட்படுத்தப் படுகின்றன. அதனால் வேலைக்கு ஏற்ற மாதிரி எருதுகளுக்கு உணவளிக்க வேண்டும். பொதுவாக ஓர் எருதுக்கு 3 முதல் 4 கிலோ வரை அடர்தீவனம், 15 முதல் 20 கிலோ வரை பசுந்தீவனம், மற்றும் 5 முதல் 6 கிலோ வைக்கோல் போன்ற உலர்தீவனம் கொடுக்க வேண்டும். எருதுகளைக் கடுமையான வேலைக்கு உட்படுத்தும் பொழுது அடர் தீவனம் பொதுவாக கொடுக்கப்படும் அளவை விட சற்று அதிகமாகக் கொடுக்க வேண்டும்.
எருதுகளை வேலைக்கு பயன்படுத்தும் பொழுது கடைபிடிக்க வேண்டியவை
மூன்று வயதைக் கடந்த பிறகு தான் எருதுகளை வேலைக்கு உட்படுத்த வேண்டும். எருதுகள் கரடு முரடான பாதைகளில் செல்லும் பொழுது கால்களில் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்க எருதுகளை வேலைக்கு உட்படுத்துவதற்கு முன்னர்; மிகுந்த பாதுகாப்பான முறையில் இலாடம் அடிக்க வேண்டும். மேலும் இலாடத்தை 2 முதல் 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். எருதுகளை வேலைக்கு உட்படுத்துவதற்கு முன்னும் பின்னும் வைக்கோல் கொண்டு எருதுகளின் குளம்புகளைத் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
பொதுவாக எருதுகளை 6 முதல் 8 மணி நேரம் வரை வேலைக்கு பயன்படுத்தலாம். ஆனால் வெயில் காலங்களில் உச்சி வெயிலில் எருதுகளை வேலைக்கு பயன்படுத்தக் கூடாது. வெயில் காலங்களில் காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் எருதுகளை வேலைக்கு உட்படுத்தலாம். வேலை நேரங்களுக்கு இடையே 3 மணி நேரமாவது ஓய்வு கொடுக்க நிழலில் கட்டி வைத்து தண்ணீர் மற்றும் சிறிது தீவனம் தர வேண்டும்.
மாட்டு வண்டிப் பயணத்திற்கு எருதுகளைப் பயன்படுத்தும் பொழுது 4 முதல் 5 கி.மீ வேகத்தில் ஓட்டிச் செல்ல வேண்டும். எருதுகளின் உடல்நிலை மற்றும் காலநிலையைப் பொருத்து ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 30 கி.மீ தூரம் செல்ல எருதுகளைப் பயன்படுத்தலாம். ஜோடி எருதுகளை வேலைக்குப் பயன்படுத்தும் பொழுது ஒரே அளவும் வலிமையும் கொண்டதாக இருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்று பெரியதாக இருந்தாலும் கழுத்துப் பகுதி சரியாகப் பொருந்தாது. மேலும் ஒரு எருது அதிக சுமையைப் பெற நேரிடும்.
எருதுகளை வேலைக்கு பயன்படுத்தும் பொழுது தவிர்க்கப்பட வேண்டியவை
எருதுகளைப் பராமரிப்போர் எருதுகளை எக்காரணம் கொண்டும் அடிக்கக் கூடாது. எருதுகளை பட்டினி போடக் கூடாது. ஓய்வின்றி எருதுகளை வேலைக்கு உட்படுத்தக் கூடாது. மாட்டு வண்டியில் சுமை அதிகமாக இருந்தால் எருதுகளின் கழுத்துப் பகுதியில் கழுத்துக் கழலைகள் மற்றும் கட்டிகள் தோன்றி எருதுகளுக்கு மிகுந்த வேதனையைத் தரும். அதனால் அதிக சுமைகளை ஏற்றக் கூடாது. எருதுகள் சுமை தாங்காமல் படுத்தால் எழச் செய்வதற்காக சுமைகளைத் தான் குறைக்க வேண்டுமே அல்லாது எருதுகளின் மூக்கில் மிளகாய்ப் பொடி போன்ற காரமான பொருட்களைத் தேய்க்கக் கூடாது. பொருத்தமற்ற எருதுகளை எக்காரணம் கொண்டு வண்டிகளில் பூட்டக் கூடாது. எருதுகள் வேகமாகச் செல்வதற்காக தார் கம்பு கொண்டு எருதுகளின் பின்பகுதிகளில் குத்தக் கூடாது.